கோனார்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
சிதம்பரம்: தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக யாதவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், இந்த சபையின் தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
யாதவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (எம்பிசி) இல்லாததால், யாதவ இளஞைர்கள் உயர்கல்வி கற்பதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பெரும் பாதிப்படைகின்றனர்.
எனவே எங்களை எம்பிசியில் சேர்க்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.
யாதவ மகாசபை மாநில மாநாடு 2008 ஏப்ரலில் ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை மத்திய, மாநில அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
ஜனவரி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம், கிராமமாகச் சென்று யாதவ சங்க கொடியேற்றப்படும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாதவர் இரு தொகுதிகளிலாவது வெற்றி பெறும் நிலையை கொண்டு வருவோம் என்றார்.