ஜுனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மாநில அளவிலான ஜுனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது.
சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த முகாம் குறித்து இந்திய ரெட்கிராஸ் அமைப்பின் மாநில வளர்ச்சி அலுவலர் பலராமன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் லோகநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக மாநில அளவில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாநிலம் முழுவதும் 40 கல்வி மாவட்டங்களில் இருந்து 200 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 40 கன்வீனர்கள் வந்துள்ளனர்.
இந்த முகாமை நடத்த முகமதியா மேல்நிலைப்பள்ளி நிர்வாகமும், ஜமாத்தும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த முகாமில் மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம், சுகாதாரம், சுற்றுப்புற சூழல், விபத்து முதலுதவி, நட்புறவு, பிறருக்கு உதவுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஜுனியர் ரெட் கிராஸ் தொண்டர்கள் மக்கள் சேவையில் ஈடுபட இந்த முகாம் உதவியாக இருக்கும். ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டங்களில் 8,500 மாணவர்கள் ஜுனியர் ரெட் கிராஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். ரெட் கிராஸ் சிவப்பு சிலுவை சின்னத்தை டாக்டர்கள், மருத்துவமனைகள், மருந்து கடைகளில் பயன்படுத்தக்கூடாது என்றனர்.
அப்போது செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன், முகமதியா மேல்நிலைப்பள்ளி தலைவர் தஸ்தகீர், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் ராக்லாண்ட் மதுரம், தாளாளர் அகமது கபீர், சித்தார்கோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் முகமது தாவூது ஆகியோரும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications