இமாச்சல் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 68 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 41 தொகுதிகளையும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தையும், சுயேச்சைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
தற்போது இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கின் பதவிக் காலம் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வரை இருந்தாலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால் பதவியில் தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சிம்லா மாவட்டத்தின் ரோஹ்ரு தொகுதியில் போட்டியிட்ட வீரபத்ர சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கெளசிராம் பல்நடாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரேம்குமார் துமால் ஹமிர்பூர் மாவட்டத்தின் பாம்சன் தொகுதியில் போட்டியிட்டு 26,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
30ம் தேதி பதவியேற்பு:
பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக டிசம்பர் 30ம் தேதி பிரேம்குமார் துமால் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 14, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது நினைவுகூறத்தக்கது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 41 இடங்களிலும் பாஜக 17 வென்றது குறிப்பிடத்தக்கது.