3 சென்னை என்ஜீனியர்கள் யு.எஸ்.சில் பலி
சென்னை: அமெரிக்காவின் செயின்ட் பிரான்சிஸ்கோ நகரில் கார் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர்கள் மூவர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தவர் மாலா (31). இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இவரது கணவர் நடராஜன் (35). இவரும் சாப்ட்வேர் என்ஜீனியர்தான். இவர்களுக்கு மோஹித் என்ற 3 வயது மகன் உள்ளான்.
மாலாவும், நடராஜனும், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் (சி.டி.எஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
நடராஜன், மாலாவுடன், பூவரசன் (28) என்பவரும் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் பூவரசனுக்கு திருமணம் ஆனது. பூவரசனின் வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. இவரது தந்தை தமிழ்வாணன் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், நடராஜன், மாலா, பூவரசன் ஆகியோருக்கு அமெரிக்காவுக்கு பணி மாறுதல் கிடைத்தது. இதையடுத்து இரு குடும்பத்தினரும் அங்கு சென்றனர். கலிபோர்னியாவில் அருகருகே வீடு எடுத்துத் தங்கினர்.
கடந்த 26ம் தேதி காலை செயின்ட் பிரான்சிஸ்கோ நகருக்கு பொருட்கள் வாங்க ஒரே காரில் சென்றுள்ளனர். பொருட்களை வாங்கி விட்டுத் திரும்புகையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
இதில் சிக்கி நடராஜன், மாலா, அவர்களது குழந்தை மற்றும் பூவரசன் தம்பதியினர் ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐந்து பேரும் விபத்தில் இறந்த தகவல் சென்னையில் உள்ள அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அமெரிக்காவுக்கு விரைகின்றனர்.