கருணாநிதியின் லேட்டஸ்ட் திசை திருப்பல்: ஜெ

சென்னை: கருணாநிதியின் லேட்டஸ்ட் திசை திருப்பல் கலர் டிவி இல்லாத எல்லா குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும் என்கிற செய்தியாகும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது,
திருக்குறளின் குறள் கூறுகின்றபடி வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது, சொந்தமாக அவர்கள் சம்பாதிக்கும் நிலைமையை உண்டாக்குவது, சுயமாக வருமானத்தைத் தேடுவதற்கான வழிவகைகளை செய்தவது, மக்கள் சுயமாக சம்பாதித்த பணத்தில் டிவி வாங்குவதற்கு வழிவகுக்க வேண்டுமே தவிர, இலவசமாக டிவி தருவோம் என ஒரு அரசு சொல்வதும், அதன்படி இயங்குவதும் குறித்தும் ஆயிரம் முறை யோசித்து பார்க்க வேண்டும்.
கருணாநிதியின் லேட்டஸ்ட் திசை திருப்பல் கலர் டிவி இல்லாத எல்லா குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும். கருணாநிதி உறுதி என்கிற செய்தியாகும்.
இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 2006-07 மற்றும் 2007-08 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை பார்க்கும் போது, கருணாநிதி வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கையின்படி ஏகப்பட்ட 2ம் கட்டங்கள் வருகின்றன. எல்லாமே 'இரண்டும் கெட்டது'களாகத் தான் தோன்றுகிறது.
2006-07, 2007-08 நிதிநிலை அறிக்கைகளின்படி, அறிவிக்கப்பட்ட தொகை ரூ.1,500 கோடி ஆகிறது. இதில் ஏகப்பட்ட முரண்பாடு. கலர் டிவி இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு கலர் டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்று கருணாநி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்தத் திட்டத்தை நிதியமைச்சர் க.அன்பழகன், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியன்று சட்டப் பேரவையில் சமர்பித்தபோது பாரா 66ன் படி தமிழகத்தில் வண்ணத் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் என்பது போய், கலர் டிவி இல்லாத குடும்பங்கள் என சொல்லப்பட்டு கருணாநிதியின் தற்போதைய அறிக்கையின் படி எல்லாக் குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி என்றாகி விட்டது.
அது தவிர, முதலில் கொள்முதல் செய்யப்பட்ட டிவி பெட்டிகளை விட, தற்போது கொள்முதல் செய்யப்படும் டிவி பெட்டியினால் ரூ.162.90 கோடி மிச்சம் என்றால் அந்தத் தொகை எதில் சேர்க்கப்பட்டது என்ற விபரமும் இல்லை.
திமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் டிவி பெட்டிகளை கொள்முதல் செய்ய டெண்டர் படிவங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க மட்டுமே பிற கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்துகின்றனர். கொள்முதல், விநியோகம் போன்றவற்றில் கூட்டணிக் கட்சியினரை பயன்படுத்துவதில்லை என்கின்றனர்.
இவ்வாறாக வழங்கப்படும் இலவச கலர் டிவிக்களை வெளி மார்க்கெட்டில் விற்பது பற்றிய செய்திகளும், மாறி வரும் மின்சாரம் காரணமாக வெடிப்பது, தீப்பிடித்து எரிவது, புகைந்து போவது உள்ளிட்ட சம்பவங்கள் தினந்தோறும் பத்திக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்து கேலிக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிப் போன டிவிகளுக்கு பதிலாக மீண்டும் புதிய டிவியை தருவார்களா என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
டிவிக்களை வெளிமார்க்கெட்டில் விற்பதும், வாங்குவதும் பெரும் குற்றம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டுகிறார்கள். ஒரு வீட்டில் ஒரு டிவி இருக்க மேலும் ஒரு டிவி கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது.
கருணாநிதியை பார்த்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச கோதுமை, இலவச அரிசி தருவோம் என்ற வாக்குறுதிகளை சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியது. ஆனால் இதற்கெல்லாம் குஜராத் மக்கள் ஏமாறவில்லை என்பது சமீபத்திய அம்மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து தெள்ளத் தெளிவாகியுள்ளது.
தமிழகம் தற்போது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குதல், பழுதடைந்த பாலங்களை செப்பனிடுதல், 4 சக்கர வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, ஏன் மனிதர்களே கூட நடமாட முடியாத அளவிற்கு குண்டும், குழியாக உள்ள சாலைகளை சீரமைத்தல் ஆகியவை தான் தற்போதைய உடனடி தேவை.
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தேவைப்படும் ரூ.1,500 கோடியை மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும், மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து, உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் தற்போதைய தலையாய பணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே ஆகும். இதை நிறைவேற்றாமல் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என கருணாநிதி நினைத்தாரேயானால், இலவச கலர் டிவி திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உடனடி தேவையாக கருதி பணத்தை எடுத்து வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதும் தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு.
ஒரு பொறுப்புள்ள முதல்வர், ஒரு பொறுப்புள்ள அரசு என்றால் வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். மக்கள் வாழ்வு இழந்து, வீடு இழந்து வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெள்ள நிவாரண உதவிகளை மேற்கொள்ளாமல் இலவச கலர்டி வழங்கி சாதனை என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வரைத்தான் தமிழக மக்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு, கல்வி வசதி, கழிப்பிட வசதி, பள்ளிகளில் இருக்கை வசதி, கரும் பலகை வசதி, பேருந்து வசதி, பேருந்து நிலைய வசதி, நிழற்குடை வசதி மற்றும் பொதுக் கழிப்பிட வசதி போன்ற அத்தியாவசியத் தேவைகள் ஏராளமாக இருக்கையில், அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications