தமிழகத்தை குறி வைக்கும் மாயாவதி!

உத்தரப்பிரேதசத்தில் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிரம்மாண்டமான வெற்றியை பெற்று அம்மாநிலத்தின் முதல்வரானவர் மாயாவதி.
தலித் வாக்குகள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முன்னேறிய வகுப்பினரின் கணிசமான ஆதரவையும் அவர் பெற்றார்.
இதையடுத்து உ.பியையும் தாண்டி அரசியலில் தீவிரமாக ஈடுபட அவர் தீர்மானித்துள்ளார். அதன் முதல் கட்டமாக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அவரது பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது.
இருந்தாலும் இதில் அவருக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் கணிசமாக பிரியக் காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள தலித், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், உயர் சமூகத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சிக்குத் திரட்டும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய் திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக தென் மாநிலங்களில் முதலில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதன் ஒரு பகுதியாக நாளை சென்னை வருகிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுரேஷ் மானே கூறுகையில், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சம உரிமை பெறுவதற்காக போராடினார்கள்.
அந்த வகையில் தலித்துகள், பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்,
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் நிலை உயர வேண்டும். உயர் சமூகத்தினரும் இவர்களுடன் சகோதரர்களாக இணைந்து முன்னேற வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சகோதரத்துவ மாநாடு நடைபெறுகிறது. அதில் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி பங்கேற்கிறார். தற்போது மராட்டிய மாநிலத்திலும், தமிழகத்திலும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநிலங்களில் பல்வேறு மதங்கள், சமுதாயம், பொருளாதார வேறுபாடுகள் காணப்படுகிறது. பெரியார், அம்பேத்கர் வழியில் அனைத்து சமூகத்தினரையும் சகோதரர்களாக ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில சகோதரத்துவ மாநாடு சென்னையில் நாளை நடக்கிறது. அமைந்தகரையில் உள்ள புல்லா அவென்யூவில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் மாயாவதி பங்கேற்றுப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications