நக்சல் தொடர்பு: பாமக செயலாளர் கைது
திண்டுக்கல்: நக்சல் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்ட பாமக செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம். இவர் திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாமக செயலாளராக உள்ளார்.
ஜஸ்டின் திரவியம் 10 வருடங்களுக்கு முன்னர் தர்மபுரி பகுதியில் வசித்து வந்தபோது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற இயக்கத்தில் முழு நேரமாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 1997ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஒரு சம்பவத்தில் ஜஸ்டின் திரவியம் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 10 ஆண்டிற்கு பின்னர் திண்டுக்கல்லுக்கு நேற்று காலை வந்த தர்மபுரி மாவட்ட நக்சல் ஒழிப்பு தனிப்படை போலீசார் ஜஸ்டின் திரவியத்தை கைது செய்து விசாரணைக்காக அவரை தர்மபுரி அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக ஜஸ்டின் திரவியத்திற்கு தர்மபுரி நீதிமன்றத்தில் பிடிவாரண்ட பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காகவே, தர்மபுரி நக்சல் ஒழிப்பு போலீசார் ஜஸ்டின் திரவியத்தை அழைத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பெண்களை கொத்தடிமைகளாக வைத்து சித்திரவதை செய்ததாக நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் பாமக பிரமுகர் ஒருவர் கைதான நிலையில் திண்டுக்கல் மாவட்ட பாமக செயலாளர் கைதாகியுள்ளார்.
பாமக, திமுக மோதல் தொடங்கியுள்ள நிலையில் இந்தக் கைதுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications