மாநகராட்சிகள் ஆன திருப்பூர், ஈரோடு

Subscribe to Oneindia Tamil


கோவை:திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது முதல்வரை மனித வெடிகுண்டு மூலம் கொல்லப் போவதாக அல் உம்மா இயக்கம் என்ற அமைப்பு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதால் முதல்வரின் நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய மாநகராட்சிகளாக சமீபத்தில் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதுதொடர்பாக அவசரச் சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன. ஜனவரி 1ம் தேதி முதல் இவை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி இன்று திருப்பூர் மற்றும் ஈரோட்டில் மாநகராட்சித் தொடக்க விழா நடைபெற்றது.

இன்று காலை 10.30 மணிக்கு திருப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சியின் தொடக்க விழா நடந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, திருப்பூர் மாநகராட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர் நகராட்சி தலைவராக இருக்கும் செல்வராஜ், மாநகராட்சி மேயராக பதவியேற்றதால் அவருக்கு மேயருக்கான அங்கியையும், செங்கோலையும் முதல்வர் வழங்கினார்.

முதல்வர் திருப்பூரில் நகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும், பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். விழா முடிவில் கோவை மாவட்ட கலெக்டர் நீரஜ் மிட்டல் நன்றி கூறினார்.

ஈரோடு மாநகராட்சி துவக்கம்:

ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஈரோடு மாநகராட்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சியை துவங்கி வைத்த பின்னர் புதிய மேயராக பதவியேற்கும், நகராட்சித் தலைவர் குமார் முருகேஸிடம் தங்க அங்கி மற்றும் வெள்ளி செங்கோல் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு திருப்பூர் மற்றும் ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அல் உம்மா மிரட்டல்:

இதற்கிடையே, முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சீர்குலைக்கப் போவதாகவும், முதல்வரை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப் போவதாகவும் அல் உம்மா இயக்கம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

திருப்பூர் தாசில்தார் சுலோச்சனாவுக்கு இந்த கடிதம் வந்தது. இக்கடிதத்தில் மனித வெடிகுண்டு மூலம் முதல்வரை தீர்த்துக் கட்டுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல்துறை வேலைகளில் வயது வரம்பை 24லிரிருந்து 29 ஆக உயர்த்த முதல்வர் கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே முதல்வரை தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்தத் தகவலை உடனடியாக திருப்பூர் நகராட்சித் தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி ஆவண செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து திருப்பூர் மற்றும் ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் கருணாநிதியின் மேடையைச் சுற்றிலும் அதிரடிப்படை கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+