சிமென்ட் இறக்குமதி: அரசின் அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது - ராமதாஸ்
சென்னை: வெளிநாட்டிலிருந்து சிமெண்ட் வந்தால் வெளி மார்க்கெட்டில் சிமெண்டின் சில்லறை விற்பனை குறையும் என்ற அரசின் அறிவிப்பு காத்திருந்த மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு தாராளமாக சிமெண்ட் கிடைக்கவும்,
வெளிநாட்டிலிருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என டான்செம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த சிமெண்ட் வந்தால் வெளிமார்க்கெட்டில் சில்லறை விற்பனை விலை குறையும் என ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் அரசின் அறிவிப்பு
இருக்கிறது.
இந்நிலையில் அரசின் கட்டுமானப் பணிகளை செய்யும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு இறக்குமதி செய்யும் சிமெண்டை ஒட்டுமொத்தமாக விற்கப்போவதாகவும், அவர்கள் தங்கள் தேவைகள் குறித்து டான்செம் நிறுவனத்திடம் பதிவு செய்து, மொத்தமாக பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், குறைந்தபட்சம் 100 டன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அதற்கு மேலும் எத்தனை 100 டன்கள் வேண்டுமானாலும் காண்ட்ராக்டர்களும், பில்டர்களும் இறக்குமதி சிமெண்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது தெளிவாகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.185லிருந்து தற்போது ரூ.260 ஆக உச்ச விலைக்கு சென்றுள்ளது. இனிமேல் விலையை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என சிமெண்ட்
உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
எனவே இன்றைய நிலையில் டான்செம் நிறுவனம் அறிவித்துள்ளது மலிவு விலை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால் அரசு அறிவித்துள்ள மலிவு விலை சிமெண்ட் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு கோடீஸ்வரர்களான காண்ட்ராக்டர்களும், பில்டர்களும் சிமெண்ட் மூட்டைகளை பெருமளவில் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்வார்கள். இதனால் மக்களுக்கு வெளிமார்க்கெட்டில் தாராளமாக சிமெண்ட் கிடைக்க செய்ய வேண்டும், விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையும்,
விருப்பமும் நிறைவேறாமலேயே போய்விடும்.
இறக்குமதி சிமெண்டை அப்படியே காண்ட்ராக்டர்களுக்கும், பில்டர்களுக்கும் ஒட்டு மொத்தமாக விற்பதாக அறிவித்திருப்பது எந்த வகையிலும் மக்கள் நல நடவடிக்கை ஆகாது. இந்த முடிவை
கைவிட வேண்டும். யாருக்கு சலுகை வழங்க வேண்டுமோ, யாருடைய சுமையை குறைக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
சொந்த வீடு கட்டுவதில் திணறிக் கொண்டிருக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் நியாய விலைக்கடைகள் மூலம் இறக்குமதி சிமெண்டை விற்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டியிருக்கிறது. இப்போது இதில் தடம் மாறத் தேவையில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.