டெல்லியில் ராமர் பால எதிர்ப்பு பேரணி-ஜெ வாழ்த்து
சென்னை: ராமர் பாலத்தை பாதுகாக்க கோரி ராமர் பால பாதுகாப்பு இயக்கம் சார்பில் டெல்லியில் பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து அனுப்பினார்.
இதில் ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பாஜக, பஜ்ரங் தள், சிவ சேனை மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக முதல்வர்கள் பேசினர். தமிழக பாஜக தலைவர்களான இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் டெல்லி ஸ்வர்ண ஜெயந்தி பூங்காவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் பேசுகையில்,
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக முதல்வர் கருணாநிதி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு போன்றவர்கள் என்ன விலை கொடுத்தாவது ராமர் பாலத்தை இடிக்க முயல்கின்றனர்.
ராமர் பாலம் என்பது இந்துக்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரும் ஆதம் பாலம் என்ற பெயரில் ராமர் பாலம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ராமர் பாலம் இடிக்கப்பட்டால் இந்திய கடலோர பகுதிகளில் உள்ள 31 சதவீத தோரியத்தை இழக்க நேரிடும் என்றார்.
ராமர் பாலத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பாரம்பரிய சின்னமாக ஜனவரி 16ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்த பேரணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பேரணிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இல.கணேசன் அறிக்கை:
இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில்,
ராமர் பாலத்தை பாதுகாக்கவும், ராமர் பாலத்தை வர லாற்று சின்னமாக அறிவிக்கக் கோரியும் டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருக்கிறார்கள்.
பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எழுச்சி மிக்க இந்த பேரணியில் மடாதிபதிகளும், துறவிகளும் உரையாற்றினார்கள்.
ராமேஸ்வரத்தில் ஒரு சிறிய நெருப்பு பொறியாக தொடங்கிய ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம், இன்று நாடு தழுவிய அளவில் எழுச்சி மிகுந்த பேரணியாக உருவாகி உள்ளது. இது புதிய எழுச்சியை உருவாக்கி உள்ளது என்று கூறியுள்ளார்.