மக்கள் சேவையை சொல்லி காட்டக் கூடாது-வீரபாண்டி
சேலம்: மக்களுக்கு செய்த சேவையை சொல்லி காட்டக் கூடாது என வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் விழாவில் அவர் பேசுகையில்,
தேர்தல் வாக்குறுதிப்படி இலவச நிலம், கேஸ் அடுப்பு, கலர் டிவிக்களை தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது. எந்த திட்டத்தையும் குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். தாங்கள் தான் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.
மக்கள் ஓட்டு போட்டு நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு சேவை செய்கிறோம். மக்கள் சேவையை அனைவரும் சேர்ந்து தான் செய்கிறோம். இதனால் சேவைகளை மேடையில் சொல்லிக் காட்டக் கூடாது.
சேலம் ரயில்வே கோட்டம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய பணிகளை தாங்கள் தான் செய்ததாக சில கட்சிகள் (பாமக) சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பலரது முயற்சியால் நடந்தது. எங்கள் கட்சியை சேர்ந்த ராசா, மத்திய நலத்துறை இணையமைச்சராக இருந்தபோது நாடு முழுவதும் 4 ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட அனுமதியளிக்கப்பட்டது. தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திருச்சியில் கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதை சேலத்தில் கட்ட வேண்டும் என நான் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணியிடம் தெரிவித்தேன். இதனையடுத்து அவரும் சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதாக அறிவித்தார். அமைச்சர் நேருவும், ராசாவும் தங்கள் பகுதியில் தான் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துவதாக அன்புமணி என்னிடம் தெரிவித்தார். பின்னர் நான் அவர்களை அழைத்து சமாதானப்படுத்தினேன்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல நல்ல திட்டங்களால் ஆளுங்கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என அனைத்து திட்டங்களையும் எதிர்க்கிறார்கள்.
திமுக ஆட்சியில் எண்ணிலடங்கா திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறோம். இதை மக்களுக்காகத்தான் செய்கிறோம். இதனை சொல்லிக் காட்டிக்கொண்டு இருக்கக் கூடாது.
எனவே இனிமேல் எம்.எல்.ஏ. காவேரி மேடைகளில் பேசும்போது சேலம் ரயில்வே கோட்டம் அமைத்தோம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்தோம் என சொல்லக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.