ஸ்டார் ஹோட்டலில் நள்ளிரவில் கலாட்டா - 30 பேர் காயம்
சென்னை: சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மேடை சரிந்து, பலர் நீச்சல் குளத்தில் மூழ்கினர். ஹோட்டல் நிர்வாகத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் மீது பெரிய மேடையைப் போட்டு வைத்திருந்தனர். அந்த மேடை மீது விருந்துக்கு வந்திருந்தவர்கள் மது போதையுடன் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவை நெருங்கியபோது திடீரென அந்த மேடை பாரம் தாங்காமல் சரிந்து நீச்சல் குளத்திற்குள் விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய பலர் நீச்சல் குளத்தில் விழுந்தனர்.
இதில் பலர் காயமடைந்தனர். நீரில் மூழ்கித் தத்தளித்த 7 பேரை போலீஸார் காப்பாற்றி மீட்டனர்.
ஹோட்டல் நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணம் என கொந்தளித்த, பணம் கொடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள்,ஹோட்டல் நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால் நிர்வாகத்தின் சார்பில் யாரும் பதில் சொல்ல வரவில்லை. இதனால் கொதிப்படைந்த கூட்டத்தின்,தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கோரி கோஷமிட்டனர்.
அவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு கேட்டனர். ஆனால் குடிபோதையில் இருந்த கூட்டத்தின், போலீஸாரை அடிக்கப் பாய்ந்தனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த கலாட்டாவால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications