புத்தாண்டு: 2 பெண்களை சூறையாடிய 80 வெறியர்கள்!
மும்பை: மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்து விட்டு வந்த 2 பெண்களை சுற்றிச் சூழ்ந்து 80 ஆண்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வெறித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் டிசம்பர் 31ம் தேதி இரவு இந்த அநாகரீக சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏராளமான ஜோடிகள் புத்தாண்டு நடன விருந்தில் கலந்து கொண்டனர்.
அப்போது இரண்டு பெண்கள், தங்களது தோழர்களுடன் விருந்தை முடித்து விட்டு வெளியே வந்தனர். அப்போது 70 முதல் 80 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சூழ்ந்தனர்.
இரு பெண்களையும் தாறுமாறாக கட்டிப்பிடித்தும், முத்தமிட்டும், அவர்களது உடைகளைக் கிழித்தும் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
அந்த இரு பெண்களையும் மீட்க முடியாமல் அவர்களுடன் வந்த ஆண் தோழர்கள் திணறியுள்ளனர். அவர்களையும் அந்த வெறிக் கும்பல் அடித்துள்ளது.
இந்த வெறிக் கும்பலிடம் சிக்கி ஒரு பெண்ணின் உடை முழுமையாக கிழிபட்டது. பின்னர் ஒரு வழியாக அந்த கும்பலிடமிருந்து இரு பெண்களும் மீண்டு தப்பினர்.
இந்த அலங்கோல, அநாகரீக சம்பவம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் புகைப்படங்களுடன் செய்தியைப் பிரசுரித்துள்ளது. இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதலில் மும்பை போலீஸார் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி பெரிதாகி விட்டதால் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரு பெண்களும் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. கொடுக்கவும் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே வழக்குப் பதிவு செய்யாமல் தாமதம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் சம்பவத்தை புகைப்படம் எடுத்த நாளிதழ் புகைப்படக்காரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இன்றைக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications