கொழும்பில் தமிழ் எம்.பி. மகேஷ்வரன் சுட்டுக் கொலை

கொழும்பு: இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் நேற்று (ஜனவரி 1) காலை கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
கொழும்பு மாவட்ட எம்.பியான மகேஷ்வரன் நேற்று காலை 10 மணியளவில், கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவிலான பொன்னம்பல வானேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மகேஷ்வரனை சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மகேஷ்வரன் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் சிகிச்ைச பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த பயங்கர சம்பவத்தில் மகேஷ்வரனின் மெய்க்காவலர் ஒருவரும் உயிரிழந்தார். 12 பக்தர்கள் காயமடைந்தனர்.
பிடிபட்ட குற்றவாளி
இந்த சம்பவத்தின்போது பாதுகாவலர்கள், குற்றவாளிகள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒரு நபர் பலத்த குண்டுக் காயத்துடன் பிடிபட்டார்.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த அவரது பெயர் வெளியிடப்படவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10 நாட்களுக்கு முன்புதான் மகேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை இலங்கை அரசு குறைத்தது. 18 பாதுகாவலர்கள் என்பதிலிருந்து 2 ஆக அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
டக்ளஸ் காரணம் என புகார்
யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் தமிழர்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களுக்குப் பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் போராளிகள் உள்ளதாக குற்றம் சாட்டி வந்தார் மகேஷ்வரன். இதுகுறித்த விரிவான தகவல்களை வெளியிடப் போவதாகவும் கூறி வந்தார். இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ரனில் விக்கிரமசிங்கே அரசில் இந்து கலாச்சார விவகாரத்துறை அமைச்சராக மகேஷ்வரன் பதவி வகித்தார். சமீபத்தில் தமிழர்கள் பெருமளவில் கொழும்பில் கைது செய்யப்பட்டனர். இதைக் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தார்.
தமிழர்களுக்கு எதிரான ராணுவத்தின் நடவடிக்ைக மிகவும் அதிரித்திருப்பதாகவும், தமிழர்களை ஈவு இரக்கமின்றி கடத்துவதும், கொல்வதுமாக ராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் மகேஷ்வரன் குற்றம் சாட்டி வந்தார்.
ராணுவத்திற்குத் துணையாக டக்ளஸ் தேவானந்தா செயல்பட்டு வருவதாகவும், அவர் கூறி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அடிப்படையில் வர்த்தகரான மகேஷ்வரன் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2005ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கொழும்பில் சரமாரியாக சுடப்பட்டார் மகேஷ்வரன். இதில் குண்டுக் காயங்கள் பாய்ந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே தமிழ் எம்.பி. மகேஷ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது படுகொலைக்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டிசம்பர் 21ம் தேதிதான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் சிவபாலன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர்தான் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 எம்.பிக்களுக்கு ஆபத்து?
மகேஷ்வரனைப் போல மேலும் 2 தமிழ் எம்.பிக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
மகேஷ்வரனைப் போலவே, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பியும், மேற்கு மாகாண மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. ஸ்ரீகாந்தா ஆகியோரின் பாதுகாப்பும் அடியோடு குறைக்கப்பட்டது.
இருவருக்கும் கொலை மிரட்டல்கள் இருந்து வரும் நிலையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இரு எம்.பிக்களின் உயிரும் மிரட்டலுக்குள்ளாகியுள்ளது. இவர்களில் மனோ கணேசன், நாட்டை விட்டு வெளியேறி விட தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளில் கொல்லப்படும் 3வது எம்.பி மகேஷ்வரன் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டக்களப்பில், தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் செயின்ட் மேரீஸ் கதீட்ரலில் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாணம் எம்.பியான நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications