புத்தாண்டு கொண்டாட வந்த 5 இளைஞர்கள் விபத்தில் பலி
மன்னார்குடி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த கார் விபத்துக்குள்ளானதில் 5 இளைஞர்கள் பலியானார்கள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிஞ்சியூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (26), அதே ஊரைச் சேர்ந்த ராஜா, கார்த்தி, வால்டர், கிருஷ்ணதாஸ், ஆண்டாங்கரை என்ற ஊரைச் சேர்ந்த வினோத், சிக்கல் செந்தில்குமார் உள்ளிட்டோர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக டிசம்பர் 31ம் தேதி இரவு டாக்சி ஒன்றைப் பிடித்து சென்றனர்.
அவர்கள் பயணித்த கார் மன்னார்குடி அருகே மேலவாசல் என்ற இடத்தில் வந்தபோது சாலையோரம் நின்றிருந்த ஜல்லி லாரிமீது பயங்கரமாக மோதியது.
இதில் கிருஷ்ணதாஸ், நாஞ்சிக்கோட்டை கோகுலன், செந்தில்குமார், கார் ஓட்டுநர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மற்ற அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.