ஜெ. வடிக்கும் நீலிக் கண்ணீர்-கருணாநிதி தாக்கு
சென்னை: இலவச கலர் டிவி வழங்க போதுமான நிதி இருக்கிறது. அதற்காக ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் 1 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் துவக்கி வைத்து கருணாநிதி பேசுகையில்,
தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆங்காங்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்குவார்கள். பொங்கலுக்கு முன்பாகவே அவை வழங்கப்படும்.
அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விக்கான விடையை மாதந்தோறும் பார்க்கிறீர்கள். எந்த அமைச்சரும் கோட்டையில் அமர்ந்து சோம்பேறித்தனமாக பொழுது போக்கவில்லை.
ஒவ்வொரு அமைச்சருக்கும் வேலைகள் தரப்பட்டுள்ளன. அந்த வேலைகள் சாதனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
மக்களுக்கு என்ன நன்மை என்று எண்ணிப் பார்த்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கும்போது நல்ல மில் துணியாக தரலாம். ஆனால் கைத்தறி துணி வழங்கினால் தான் நெசவாளர்கள் பேசி பிரச்சனை போக்கப்படும்.
எனவே, கைத்தறி ஆடை வழங்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்துகிறோம்.
இதன் மூலம் நெசவாளர்களின் துயரும் தீரும். ஏழைகளின் துணி பற்றாக்குறையும் நீங்கும். ஏன் இந்த வேட்டி, சேலை எனக் கேட்கும் புதிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
இலவச கலர் டிவி வழங்குவதற்கு பதில் வெள்ள நிவாரணம் தர வேண்டும் என அம்மையார் யோசனை கூறுகிறார். எங்கள் ஆட்சியில் வெள்ள நிவாரணம் வழங்கவும், இலவச கலர் டிவி வழங்கவும் போதிய பணம் இருக்கிறது. அதுபற்றி யாரும் கவலைப்படவோ, நீலிக்கண்ணீர் வடிக்கவோ வேண்டாம்.
இந்த முயற்சி என்றும் வென்றிட உங்கள் பாசம், அன்பு திமுக ஆட்சிக்கு வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications