அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலக இலங்கை அரசு முடிவு
கொழும்பு: நார்வே தூதுக் குழுவின் முயற்சியால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திலிருந்து முறைப்படி விலகிக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இலங்கையில் போர் உக்கிரமடையும் ஆபத்து எழுந்துள்ளது.
நார்வே தூதுக்குழுவின் முயற்சியால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்டது.
ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் சீக்கிரமே மீறப்பட்டு விட்டது. இரு தரப்பும் சிறு சிறு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடத் தொடங்கி இன்று பெரிய போராக மாறியுள்ளது.
இரு தரப்பிலும் கடுமையாக சண்டை நடந்து வருகிறது. தினசரி சராசரியாக 20-30 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் இரு தரப்புமே இதுவரை அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. போர் நிறுத்த ஒப்பந்த விதிப்படி, இரு தரப்பிலும் யாரேனும், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்பு நார்வே அரசுக்கு நோட்டீஸ் தந்து விலகிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இரு தரப்புமே போர் நிறுத்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முறைப்படி விலகிக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெஹலியா ரம்புகெவல்லா கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான நோட்டீஸ் வழங்கப்படும்.
இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இப்போதைக்கு தடை விதிப்பதில்லை என்று அரசுத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் இனிமேல் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. இதை ஒரு கொள்கை முடிவாக எடுத்துள்ளோம். நார்வே முயற்சியில் 2002ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வி அடைந்து விட்டது என்றார் அவர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறைப்படி முறித்துக் கொள்ள இலங்கை அரசு தயாராகி விட்டதால், இலங்கையில் போர் மேலும் உக்கிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.