'ஓசி பயணம்': குமரியில் வட மாநில விவசாயிகள் ரகளை
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு ரயிலில் ஓசி பயணம் செய்த உ.பி, மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 7,000 விவசாயிகளை ரயில்வே அதிகாரிகள் ரயில் நிலையத்தில் பிடித்து வைத்தனர். ஆனால் டிக்கெட் எடுக்கவே முடியாது என்று கூறி விவசாயிகள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக வட இந்தியாவிலிருந்து பெரும் திரளானோர் தமிழகத்தின் கோவில் நகரங்களான மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்தான். மேலும் டிக்கெட்டே எடுக்காமல்தான் பயணம் செய்து வருகின்றனர்.
வட இந்தியாவில் இதுபோன்ற 'மாஸ்' ஓசி பயணத்தை ரயில்வே அதிகாரிகள் தடுப்பதில்லை. தமிழகத்தைத் தவிர மற்ற ஊர்களுக்கு இவர்கள் இப்படி அடிக்கடி ஓசி பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில்தான் இவர்களுக்குப் பிரச்சினை வருகிறது. தமிழகத்தில் ஓசி பயணத்தை சுத்தமாக யாருமே அனுமதிப்பதில்லை என்பதால் இவர்களை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து டிக்கெட் எடுக்குமாறு ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்துவதும், அதற்கு மறுத்து கோஷமிட்டு ரகளை செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பீகாரிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் இதுபோல ஓசி பயணம் செய்து சென்னை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் என ஜாலியாக சென்றனர். ஆனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் இவர்களை ரயில்வே ஊழியர்கள் நிறுத்தி வைத்து டிக்கெட் எடுக்குமாறு கண்டிப்புடன் கூறினர்.
ஆனால் அவர்களோ, இது லாலு விட்ட ரயில், எங்களிடமே டிக்கெட் கேட்கிறீர்களா என்று ரகளை செய்தனர். அவர்களின் தொல்லை தாங்காமல் அதிகாரிகள் விட்டு விட்டனர்.
இந் நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆயிரக்கணக்கில் சமீபத்தில் ராமேஸ்வரத்தில் கூடினர். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி போராட்டம் நடத்தவே அவர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அங்கு கடன் பத்திரங்களை கடலில் வீசி எறிந்து போராட்டம் நடத்தினர்.
உ.பி, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கிட்டத்தட்ட 7,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓசியிலேயே ரயில் பயணம் செய்து சென்னை வந்தனர். அங்கு ரயில்வே ஊழியர்கள் இவர்களை பிடித்து வைத்து டிக்கெட் எடுக்குமாறு வற்புறுத்தினர். வழக்கம் போல அவர்களும் காச் மூச் என்று இந்தியில் பேசி கலாட்டா செய்து பயணத்தைத் தொடர்ந்தனர்.
ராமேஸ்வரம் வரை இப்படியே ஓசியில் வந்து விட்ட இந்த விவசாயிகள், இன்று காலை (ஜனவரி 3) கன்னியாகுமரிக்க சுற்றுலா சென்றனர். வழக்கம் போல ஓசிப் பயணம்தான்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்திலும் இவர்களை ரயில்வே ஊழியர்கள் நிறுத்தி டிக்கெட் கேட்டனர். அதற்கு அவர்கள் டிக்கெட்டா, நாங்கள் எங்குமே டிக்கெட் எடுக்கவில்லை. இங்கு மட்டும் எப்படி எடுப்பது என்று கேட்டு ரகளை செய்தனர்.
மேலும், எங்களிடம் பணமே இல்ைல. டிக்கெட் எடுக்க மாட்டோம் என்றும் பிடிவாதமாக கூறினர். இதனால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.