மோடிக்கு கோவில் கட்டி கும்பிடும் பாம்பாட்டிகள்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் போஜ்பூரா கிராமத்தில், முதல்வர் நரேந்திர மோடிக்கு பாம்பாட்டிகள் சேர்ந்து கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். அந்தக் கோவில் படு வேகமாக பிரபலமாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வானகனீர் மாவட்டத்தில் உள்ளது இந்த குக்கிராமம். இக்கிராமத்தில் 111 பாம்பாட்டி குடும்பங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறின. இவர்களின் தொழிலே பாம்பு பிடிப்பதுதான்.
ஆரம்பத்தில் இவர்கள் இந்தக் கிராமத்திற்கு வந்தபோது கூடாரம் போட்டுத்தான் தங்கியிருந்தனர். ஆனால் இது அவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது.
இதையடுத்து முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
முதல்வர் மோடியும், உடனடியாக பாம்பாட்டிகளின் குடும்பங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டது. அதில் வீடுகளைக் கட்டவும் அரசே நிதியுதவி அளித்தது. இதுதவிர ஒரு பள்ளிக்கூடமும் கட்டித் தரப்பட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாம்பாட்டிகள் பெரும் வியப்படைந்தனர். மோடியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர்.
பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பாம்பாட்டிகளின் குழந்தைகள் இன்று கம்ப்யூட்டரும், கையுமாக இருப்பதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.
மோடி தங்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளை மறக்காத பாம்பாட்டிகள் தற்போது அவருக்கு ஒரு கோவிலை ஏற்படுத்தியுள்ளனர். அதில் தினசரி மூன்று வேளை பூஜையும் செய்து அசத்துகின்றனர்.
இந்தக் கோவிலை விரைவில் பெரிய கோவிலாக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு மோடிதான் கடவுள். அதனால்தான் கோவில் கட்டினோம் என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications