புதிய புயல் சின்னம்: தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை
சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து மீண்டும் கடந்த சில நாட்களாக சென்னைவாசிகள் வெயிலை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில்கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது.
சென்னை நகரில் சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை விளாசித்தள்ளியது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.
ஆனால் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இன்று காலை முதல் சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்றுகாலை நகரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளானார்கள்.
வங்கக் கடலின் தென் மேற்கில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால்தான் இந்த மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும் அது அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications