தமிழகத்தில் 11 எம்.பி தொகுதிகளில் மாற்றம் - அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: தமிழ்நாட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மாற்றப்பட்ட 11 எம்.பி. தொகுதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளும் 39 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. 1971ம் ஆண்டு முதல் இந்த தொகுதிகள் எதுவும் மாற்றப்படாமல் இருந்தன.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக தொகுதிகளை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து தொகுதிகள் மறு சீரமைப்பு தொடர்பான கருத்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன.
இதையடுத்து தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், மக்கள் தொகைக்கேற்ப எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பல தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பல பொதுத் தொகுதிகள் தனித் தொகுதிகளாக மாறியுள்ளன. பல தனித் தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருந்த எம்.பி. தொகுதிகளான புதுக்கோட்டை, கோபிச்செட்டிபாளையம், திண்டிவனம், வந்தவாசி, திருப்பத்தூர், திருச்செங்கோடு, திருச்செந்தூர், செங்கல்பட்டு, சிவகாசி, பெரியகுளம் மற்றும் நாகர்கோவில் ஆகிய 11 தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த தொகுதிகளுக்கு பதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மறுசீரமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய தொகுதிகள் அடிப்படையில்தான் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.