துணை தாசில்தார் வீட்டில் ரெய்டு - ரூ. 48 லட்சம் ரொக்கம் சிக்கியது
காஞ்சிபுரம்: செங்கல்பட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், துணை தாசில்தார் வீட்டிலிருந்து ரூ. 48 லட்சம் ரொக்கம், ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின.
செங்கல்பட்டு என்.ஜி.ஜி.ஓ. நகரில் துணை தாசில்தார் ரகுநாதன் என்பவரது வீடு உள்ளது. இவர் வருமானத்திற்கும் மீறிய வகையில் சொத்து குவித்து வருவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (ஜனவரி 4) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரகுநாதன் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ரகுநாதன் வீட்டில் இல்லை. ரெய்டு வரப் போவதை அறிந்து தலைமறைவாகி விட்டார்.
ரகுநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் அவர்களே எதிர்பார்க்காத வகையில் பெரும் பணக் குவியல் சிக்கியது.
ரூ. 48 லட்சம் ரொக்கப் பணம் சோதனையில் சிக்கியது. இதுதவிர ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களுக்கான ஆவணங்களும் சிக்கின. இது போக, ரூ. 33.5 லட்சம் தொகைக்கான பிக்சட் டெபாசிட் குறித்த ஆவணங்களும் சிக்கின.
நேற்று முழுவதும் ரகுநாதன் வீட்டில் சோதனை நடந்தது. துணைதாசில்தார் வீட்டில் இந்த அளவுக்கு சொத்துப் பத்திரங்களும், பணமும் சிக்கியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா இதுகுறித்துக் கூறுகையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறையிடமிருந்து விரிவான அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications