மங்களூரில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது - ரூ. 3 லட்சம் நகைகள் பறிமுதல்
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்திய போலீஸார் அங்கு தங்கியிருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யபப்பட்டன.
மங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கைத் தமிழர்கள் இருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலை போலீஸார் சோதனையிட்டு அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த பால ரூபன் என்கிற ரூபன் என்கிற கதிர்வேலு குணசெல்வனையும், ஜெயசீலன் என்கிற சீலனையும் கைது செய்தனர்.
இருவரும் பெங்களூரில் தங்கியுள்ளனர். மங்களூர் வந்து ஹோட்டலில் தங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கினர்.
இருவரிடமிருந்தும் குணசெல்வன் என்கிற பெயரில் இருந்த இரண்டு போலி பாஸ்போர்டுட்கள், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தங்களிடம் போலியான கிரெடிட் கார்டுகளைக் கொடுத்ததாகவும், அதை வைத்து நகைகள் வாங்கியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்னர்.
இந்த நகைகளை மங்களூர் மற்றும் கர்கலாவில் உள்ள கடைகளில் வாங்கியதாகவும், இதற்காக தங்களுக்கு கமிஷன் தருவதாக அந்த இலங்கைத் தமிழர் உறுதியளித்திருந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.
இந்த போலி கிரெட்டி கார்டுகள் சென்னையில் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவருக்கும் சர்வதேச அளவிலான போலி கிரெடிட் கார்டு கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த நகைகள் வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போனில், பல வெளிநாட்டினின் எண்களும் உள்ளன.
இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.