மாணவியை கற்பழித்த பாதிரியார் - போலீஸ் வலைவீச்சு
தர்மபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பாதிரியார் சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்று கற்பழித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள சாவடியூரைச் சேர்ந்த அமலநாதன்-மதலமேரி தம்பதியினர். இவர்களுடைய மகள் சுமிதாமேரி (16) கோவிலூரில் உள்ள கிருஸ்தவ பள்ளியின் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
சுமிதாமேரி தனது தாய் மதலமேரியுடன் தர்மபுரி துணை எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். மதலமேரி கொடுத்துள்ள புகாரில்,
எனது மகள் சுமிதாமேரி கோவிலூரில் உள்ள கிருஸ்தவ பள்ளியில் 1ம் வகுப்பு முதல் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
தற்போது 9ம் வகுப்பு படித்துவரும் எனது மகள் உட்பட 30 மாணவிகளை, கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் கிருஸ்தவ பயிற்சி பள்ளியின் பாதிரியார் அமலநாதன், ஞானபிரகாசம் ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது தும்பல்அள்ளி அணைக் காட்டு பகுதியில் அனைத்து மாணவிகளும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அணைப் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமலநாதன் எனது மகள் சுமிதா மேரியை மறைவான இடத்திற்கு சென்று கற்பழித்து விட்டார். இதுகுறித்து
வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இப்போது எனது மகள் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். நன்றாக படிக்கும் எனது மகள் திருமணம் செய்யாமலேயே 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். எனது குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட துணை எஸ்பி விஜயராகவன் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தர்மபுரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்படி வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாதிரியார் அமலநாதனை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
நடந்தது குறித்து சுமிதா மேரி கூறுகையில், 1ம் வகுப்பு முதல் நான் அங்கு படித்து வருகிறேன். பள்ளி விடுமுறையின் போது மட்டும் பெற்றோரை பார்க்க சொந்த ஊர் வருவேன்.
கடந்த மே மாதம் ஆண்டு தேர்வு விடுமுறையில் தர்மபுரி மாவட்டம் தடல்பட்டி கிருஸ்தவ பயிற்சி பள்ளி பாதிரியார் அமலநாதன் என்பவர் எங்கள் கிராமத்திற்கு வந்து பைபிள் போதனைகள் பற்றிய விளக்க பயிற்சி முகாமை ஒரு மாதம் நடத்தினார்.
30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை பாதிரியார்கள் அமலநாதன், ஞானபிரகாசம் ஆகியோர் சுற்றுலா அழைத்து சென்றனர். தும்பலஅள்ளி அணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, என்னை மட்டும் பாதிரியார் அமலநாதன் அப்பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்து பலவந்தமாக கற்பழித்து விட்டார்.
இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இச்சம்பவத்திற்கு பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்த நான், எனது தாயிடம் சொன்னேன். பின்னர் என்னை பரிசோதனை நடத்த எனது அம்மா மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போது நான் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து விசாரிக்க விடுதிக்கு வந்த எனது தாயாரிடம் விடுதியில் உள்ளவர்கள் சமரசம் பேசி, என்னை புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடியில் உள்ள விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
நாட்கள் ஆக ஆக நான் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரியவரவே என்னை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். என் வாழ்க்கையை சீரழித்த பாதிரியாருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற கொடுமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது என்றார் சுமிதா மேரி.












Click it and Unblock the Notifications