இலங்கை செல்லும் திட்டம் ஏதும் இல்லை-மன்மோகன் சிங்
டெல்லி: இலங்கை செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில்் நடந்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ரய் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை சீனா செல்கிறேன். இது இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகள் நல்ல திசையில் சென்று கொண்டுள்ளன. திருப்திகரமான வகையில் உள்ளன. இது சிக்கலான பிரச்சினை. இருப்பினும் இரு நாட்டு சிறப்புப் பிரதிநிதிகளிடையிலான பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இந்த ஆண்டில் இலங்கை செல்லும் திட்டம் எதுவும் எனது நிகழ்ச்சி நிரலில் இல்லை. அதுபற்றிய சிந்தனையும் என்னிடம் இல்லை.
டெல்லிவாசிகள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற துணை நிலை ஆளுநரின் உத்தரவால் ஏற்பட்டுள்ள பிரச்சினை பெரிய விஷயம் இல்லை. அதுதீர்க்கப்படக் கூடியதுதான்.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் துணை நிலை ஆளுநரின் செயல்பாட்டில் தலையிட எனக்கு விருப்பம் இல்லை.
இந்த உத்தரவு தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகள் சுமூகமான முறையில் தீர்க்கப்படும்.
உ.பி. முதல்வர் மாயாவதி தனக்கு பிரதமருக்கு அளிப்பது போன்ற சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கவனிப்பார் என்றார் சிங்.