இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பு - நடுவர்கள் கொடும்பாவி எரிப்பு
டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக தீர்ப்புகளைக் கூறிய நடுவர்கள் ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகியோரது கொடும்பாவிகளை எரித்து இந்தியாவில் கிரிக்கெட் ரசிர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் நடுவர்கள் பக்னர், மார்க் பென்சன் ஆகியோரின் தவறான தீர்ப்புகளால் இந்தியா தோல்வி அடைந்தது. இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் கான்பூரில், ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு இரு நடுவர்களையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். இரு நடுவர்களின் கொடும்பாவிகளையும் தீ வைத்துக் கொளுத்தினர். நடுவர்களை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
இதேபோல கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களிலும் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
பக்னருக்கு காதும் கேட்கவில்லை, பார்வையும் சரியாக தெரியவில்லை. இனிமேலும் அவரை யாரும் நடுவராகப் பணியாற்ற அழைக்கக் கூடாது என்று ரசிகர்கள் கோபமாக கூறினர்.
இந்தியா இனிமேல் ஆஸ்திரேலியாவுக்கு போகவே கூடாது. இப்போதைய டூரையும் ரத்து செய்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.