மூன்றாவது அணியுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு
டெல்லி: மூன்றாவது அணியின் முக்கியத் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் ஆகியோருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய அரசுக்கு ஆதரவு தந்து அரசைக் காப்பாற்றி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் மூன்றாவது அணியினருடன் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பெரும் பரபரப்பாக உருவான இந்த மூன்றாவது அணி ஜெயலலிதாவின் உபயத்தால் ஆரம்பத்திலேயே கலகலத்துப் போனது. இந்த அணியின் தலைவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதா பாஜக பக்கமாய் நகர்ந்து வருகிறார்.
இதனால் இந்த அணியின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது. இந் நிலையில் இப்போது இந்த அணி மீண்டும் அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் காரத்துடன் இந்த சந்திப்பு நடக்கிறது.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் வலதுகரமான அமர்சிங் இடதுசாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வருவபர். அவர் மூலமாகவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்புக்கான காரணம் ஏதும் கூறப்படவில்லை. ஆனாலும், விரைவிலேயே மத்திய காங்கிரஸ் கூட்டணிக்கு தந்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறப் போவது மட்டும் நிச்சயம் என்று கூறப்படுகிறது. இதனால் இச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications