முழு பலத்தையும் விரைவில் காட்டுவோம்: விடுதலைப் புலிகள்
கொழும்பு: இலங்கைப் படைகளுக்கு எதிரான போர் மேலும் தீவிரமடையும். எங்களது முழு பலத்தையும் காட்டி இலங்கைப் படைகளை ஒடுக்குவோம். உலக நாடுகளுக்கும் எங்களது பலத்தைக் காட்டுவோம் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் சமீப காலமாக போர் உக்கிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகள் தரப்பில் பலர் பலியாகி வருகின்றனர். தமிழ்ச்செல்வன், கர்னல் சார்லஸ் என இரு பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விரைவில் முழு பலத்தையும் காட்டப் போவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும், அமைப்பின் முக்கிய சிந்தனையாளருமான கே.பாலகுமாரன், தமிழீழ தொலைக்காட்சியில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுரித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் தங்களது முழு பலத்தையும் விரைவில் காட்டுவார்கள். அது ஒன்றுதான், இப்போது புலிகள் குறித்த குழப்பமான கருத்துக்களுக்கு முடிவு கட்டுவதாக அமையும். அப்போதுதான் சர்வதேச சமுதாயம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க முன்வரும்.
இந்தியா உள்பட உலக நாடுகள், இலங்கை பிரச்சினையில் எந்தவித முடிவையும் எடுக்காமல், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை எடுக்காமல் உள்ளன. இனப் பிரச்சினை குறித்து சர்வதேச சமுதாயம் மெளனமாக இருக்கிறது. முடிவு எடுப்பதில் திணறுகின்றன, தயங்குகின்றன.
ஆனால் 2008ம் ஆண்டில் இந்த நிலை அகலும், எங்களது தடைகள் அகலும் என நம்புகிறோம்.
2003ல் எங்களை தீவிரவாதிகள் என்று உலக சமுதாயம் கூறியது போல இந்த ஆண்டு அவர்கள் எங்களை கூற மாட்டார்கள். இந்த ஆண்டில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தெளிவான ஒரு முடிவு ஏற்படும். அந்த முடிவை புலிகள் கொண்டு வருவார்கள் என்றார் பாலகுமாரன்.












Click it and Unblock the Notifications