சாட்சி சொல்ல வருமாறு ஜெ.வுக்கு கோர்ட் சம்மன்

கடந்த 2005ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது,
ஆளுநராக சென்னாரெட்டி இருந்தார். அப்போது ஆளுநர் மாளிகையிலிருந்து முக்கியத் தகவல்களை திருடி ஜெயலலிதாவிடம் கொடுத்ததாக ஐந்து ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. மேலும், ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஆளுநரின் துணைச் செயலாளராக இருந்த மதிவாணன் போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் இந்த ஐந்து பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐந்து பேரும் அதிமுகவில் சேர்ந்தனர். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதி ஆறுமுகம் மறுத்து விட்டார். இதையடுத்து ஜார்ஜ்டவுன் 15வது பெருநகர நீதித்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி பரமராஜ் முன்னிலையில் வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கில் ஜெயலலிதா ஒரு முக்கிய சாட்சி. எனவே அவரை கோர்ட்டுக்கு அழைத்து சாட்சியம் சொல்லுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி மார்ச் 24ம் தேதி இவ்வழக்கில் சாட்சியம் சொல்ல வருமாறு கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், சட்டசபை சபாநாயகர் மூலமாக சம்மன் உத்தரவை ஜெயலலிதாவிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதேபோல முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சைதை துரைசாமிக்கும் சாட்சியம் சொல்ல வருமாறு கூறி சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications