துபாயில் 2 இந்தியர்கள் தற்கொலை - பஹ்ரைனில் விபத்தில் ஒருவர் பலி
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துபாயில், 2 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களிடையே தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேலை பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், நீண்ட காலமாக குடும்பத்தினரை விட்டு வந்து தங்கியிருப்பது, அதிக வேலைப்பளு, மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தற்கொலைகள் நடக்கின்றன.
இதைத் தொடர்ந்து இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்களைத் தடுக்க பணியாளர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் கவுன்சிலிங் மையங்களைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு இந்திய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 13 தூதரகங்களில் கவுன்சிலிங் மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், துபாயின் கோர் கோவைர் பகுதியில் 32 வயது இந்தியத் தொழிலாளி தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல 57 வயதாகும் இன்னொரு இந்தியரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விபத்தில் இந்தியர் பலி:
இதற்கிடையே, பஹ்ரைனில் நண்பருடன் மது விருந்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய இந்தியத் தொழிலாளி விபத்தில் பலியானார்.
ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கோணரேபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாந்தன வெங்கடி (45).
இவர் புத்தாண்டையொட்டி தனது நண்பரின் இருப்பிடத்திற்குச் சென்றார். அங்கு மது அருந்தியுள்ளார். பின்னர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார். அப்போது விபத்தில் சிக்கிப் பலியானார்.
இந்திய மதிப்பில் மாதம் ரூ. 8,000 சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார் வெங்கடி. அவரது உடலை ஆந்திராவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications