இந்திய தொழிலாளர்களுக்கு மலேசிய அரசு திடீர் தடை

மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கோரி கோலாலம்பூரில் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகள் ஐந்து பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியத் தொழிலாளர்களை மலேசியாவில் வேலையில் அமர்த்த அந்த நாட்டு அரசு திடீரென தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மலேசியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மலேசிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 2 வாரங்களுக்கு முன்பே இதுதொடர்பான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.
சாதாரண தொழிலாளர்கள் முதல் புரபஷனல்கள் வரை யாருமே இனிமேல் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள். இனிமேல் இந்தியர்களுக்கு ஒர்க் பெர்மிட் கொடுக்கப்பட மாட்டாது.
தற்போது ஒர்க் பெர்மிட்டில் பணியாற்றிக் கொண்டிருப்போருக்கு, அது முடிந்தவுடன் புதுப்பிக்கப்பட மாட்டாது.
இந்த தடை உத்தரவு வங்கதேச தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
மலேசியாவில் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை ஆகியவற்றில்தான் பெரும்பாலான இந்தியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். மலேசியாவில் வேலை பார்த்து வரும் 20 லட்சம் வெளிநாட்டினரில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய அரசின் இந்த திடீர் தடையால் இரு நாட்டு உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலேசியா சென்றுள்ள நிலையில் இப்படி ஒரு தடை உத்தரவை மலேசிய அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications