இலங்கையில் கடும் சண்டை - 33 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடந்த கடும் சண்டையில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவமும், 14 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அமைச்சர் தசநாயகா கண்ணிவெடித்தாக்குதலில் நேற்று கொல்லப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
பரப்பகந்தல் என்ற இடத்தில் நேற்று மாலை விடுதலைப் புலிகளின் தடுப்பு அரண்களைத் தாண்டி ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பெண்கள் பிரிவைச் சேர்ந்த முக்கிய தலைவர் சுடர்மலரும் அடக்கம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பரப்பகந்தல், மன்னார் பகுதியில் பல புலிகளின் முகாம்கள், பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் தடுத்து விரட்டியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, மன்னார் மாவட்டத்தின் முல்லிக்குளம் என்ற இடத்தில் ராணுவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications