தமிழகத்திற்கு பிரபாகரன் மனைவி வந்திருப்பதாக வதந்தி!
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்திற்குள் வந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சலசலப்பு நிலவுகிறது. இதையடுத்து ராமநாதபுரத்தில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கையிலிருந்து சில அகதிகளுடன் பிரபாகரனின் மனைவி மதிவதனி ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் ஊடுருவியிருப்பதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அவர் ராமாநாதபுரத்தில் தங்கியிருப்பதாக ஒரு தகவலும், மதுரைக்குப் போய் விட்டதாக இன்னொரு தகவலும் கூறுகிறது.
ஆனால் இந்தத் தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் மறுத்துள்ளார். இது வதந்தி, இதை யாரும் நம்ப வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் கியூ பிரிவு போலீஸார், மத்திய, மாநில புலனாய்வுப் பிரிவினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் தீவிர தேடுதல் வேட்டையும், சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக மண்டபம் முகாமிலும், மதுரையிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 64 அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரபாகரன் மனைவி ராமநாதபுரத்திற்கு வந்திருப்பதாக வெளியான தகவலால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications