அதிமுக - சிபிஐ மோதல் - ஒருவர் குத்திக் கொலை
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே அதிமுகவினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மாரச்சேரியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(43). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. அப்போது கூட்டத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பக்கிரிசாமி, மாதவன் ஆகியோரும், செல்வராஜும், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த முத்து (58) மற்றும் ஆறுமுகம்(35) ஆகியோரை விமர்சித்துப் பேசினர்.
இது முத்துவின் மகன் ரங்கசாமிக்குத் தெரிய வந்தது. அவரும், ஆறுமுகமும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடந்த இடத்திற்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் பின்னர் சண்டையாக மாறியது. இரு தரப்பினரும் கத்தி, கடப்பாரைகளை எடுத்து தாக்கிக் கொண்டனர். அதில், செல்வராஜ் கத்தியால் குத்தப்பட்டார். மாதவன், நாகராஜும் பலமாக தாக்கப்பட்டனர்.
அதிமுகவினர் தரப்பில் முத்து உள்ளிட்ட இருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. கத்திக் குத்துப்பட்ட செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனால் திருத்துறைப்பூண்டியில் பதட்டம் நிலவுகிறது. மோதல் மேலும் வலுக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications