நோயாளி போல பிதற்றுகிறார் ராமதாஸ் - சேதுராமன்
மதுரை: குளிர் ஜுரம் வந்த நோயாளி போல பிதற்றுவது பாமக நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று என மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபைத் தேர்தல் நேரத்தில் குளிர் ஜுரம் கொண்ட நோயாளி போல பிதற்றுவது ராமதாசுக்கு புதிதல்ல, வழக்கமானதுதான்.
2001 தேர்தலில் புதுச்சேரியை பிடிப்பேன் என முழங்கினார். கடைசியில் காங்கிரசிடம் 2 சீட்டுக்களை கெஞ்சி கேட்டு வாங்கி போட்டியிட்டார். 2001ல் தமிழகத்தில் பாமக ஆட்சி என்றார். கடைசியில் அதிமுகவிடம் அமைதியாக சரண்டராகி விட்டார்.
2006ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் வழக்கமான வீரமுழக்கமிட்டவர் திமுகவிடம் கையேந்தி 31 தொகுதிகளை பெற்று 18ல் மட்டும் வெற்றி பெற்றார்.
ராமதாசுக்கு தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு என்று எதுவும் இல்லை. கூட்டணி செல்வாக்கை தன் செல்வாக்கு என்று கூறுவது ராமதாசுக்கு வழக்கமான ஒன்றாகும். அரசியல் பலமிழக்கும் நேரத்தில் தன்
பலத்தை கூட்டிக் காட்டுகிறார்.
சமூகநீதி பேரவை என்ற அமைப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதி அமைப்புகளும் உருவாக்கின. அந்த அமைப்புக்கு ராமதாஸ் தலைவரானார். ஆனால் அந்த அமைப்பில் இருந்த எந்த ஜாதி சங்கத்தையும் ராமதாஸ் மதிக்கவே இல்லை.
தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வர்ணஜாலம் காட்டி மறையும் நீர்க்குமிழி போன்றவர் ராமதாஸ். 2011ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் கூட்டணி உருவாக்கலாம்.
ஆனால் அந்தக் கூட்டணியில் சேர தமிழக அரசியல் கட்சிகள் எதுவும் முன்வராது. சமூக நீதி பேரவை, தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து நடந்து அரசியல் செல்வாக்கு பெற்றால் அது பாமகவுக்கு பெரும் ஆபத்து. அதனால் அதனை வளரவிடாமல் தடுத்தவர் ராமதாஸ் என தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் சேதுராமன்.












Click it and Unblock the Notifications