கலெக்டர் அலுவலகம் முன் ஒப்பாரி போராட்டம்
தூத்துக்குடி: போலீசார் கைது செய்த இருவப்பபுரம் பஞ்சாயத்து மீட்பு குழுவினரை விடுவிக்க கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் இருவப்பபுரம் பஞ்சாயத்து கடந்த 20-10-1964ல் சாயர்புரம் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் இருவப்பபுரத்தை மீண்டும் தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்று வழியுறுத்தி அதன் சுற்று வட்டார மக்கள் பஞ்சாயத்து மீட்பு குழுவை உருவாக்கினர்.
இதன் மூலம் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் இருவப்பபுரம்-சாயர்புரம் சாலையில் தினமும் ஒரு குடும்பத்தினர் என்ற அடிப்படையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் போராட்ட குழுவை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இருவப்பபுரம், மணக்காடு, பெருமையாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் மக்கள் உரிமை குழு தலைவர் வக்கீல் அதிசய குமார், மனித உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் ராமசந்திரன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் அங்கு ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நூதனப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.