சிமென்ட் விலை குறைப்பு கண் துடைப்பு: ஜெ. சாடல்
சென்னை: சிமென்ட் விலையை மூடைக்கு ரூ. 200 ஆக குறைப்பாக சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூறியிருப்பது கண் துடைப்பு நாடகமாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிமென்ட் ஆலை அதிபர்களுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் இடையே இதுதொடர்பாக ரகசிய பேரம் நடந்துள்ளது.
சிமென்ட் விலையை மூடைக்கு ரூ. 200 ஆக குறைத்திருப்பதாக சிமென்ட் உற்பத்தியாளர்கள் அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகும். இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
மேலும், பெர்மிட் அடிப்படையில், சிமென்ட்டை நேரடியாக நுகர்வோருக்கே தருவது என்பதும் சாத்தியமில்லாதது. நலிவடைந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சிமென்ட் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து, சிமென்ட் மூடைக்கு ரூ. 200 விலை என்று கூறுவது நடுத்தர வர்க்க மக்களுக்கு எந்தவித பயனையும் தராது. காரணம், நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலானவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதை விட பிளாட்டுகளை வாங்குவதையே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த விலை குறைப்பு என்ற அறிவிப்பு எந்தவித பலனையும் தராது.
மேலும் பெர்மிட் முறையில் சிமென்ட் விலையைக் குறைப்பதாக கூறுவது பல்வேறு முறைகேடுளுக்குத்தான் வழி வகுக்கும். மேலும் இதனால் ஆளுங்கட்சியினர்தான் பலன் அடைவார்கள்.
குறைந்த விலையில் நடுத்தர மக்களுக்கு சிமென்ட் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். மேலும், ஒரு மாதத்திற்கு தமிழகத்தில் எவ்வளவு சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.