திருச்சியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
திருச்சி: திருச்சியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போல, திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பர், நவல்பட்டு, பெரிய சூரியூர் , சின்ன சூரியூர் , திருவளர்ச்சிப்பட்டி போன்ற ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விசேஷமாக நடைபெறும்.
ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கலைக் கொண்டாடுவதில்லை என இந்த கிராமத்து மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி, திருவெரும்பூர் அருகே உள்ள கூத்தப்பர் கிராமத்தில் உள்ள மந்தையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வேங்கூர், அரசங்குடி, அண்ணாவளைவு, நடராஜபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் இதில் கலந்து கொண்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்தனர்.
தகவல் கிடைத்தவுடன் திருவெறும்பூர் போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மாடுகள் போய் விட்டன. ஜல்லிக்கட்டு நடந்தது உறுதி செய்யப்பட்டால் கிராம மக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெறும்பூர் டிஎஸ்பி சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.