தனி தெலுங்கானா-டிஆர்எஸ் இறுதி எச்சரிக்கை
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலத்தை அறிவிக்காவிட்டால் தனது கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்களும், 16 எம்பிக்களும் கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் எச்சரித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் பெரும் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி.
மத்தியில் ஆட்சியமைக்க இக் கட்சியின் ஆதரவை கேட்டுப் பெற்றது காங்கிரஸ். அப்போது தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என உறுதியளித்தது.
ஆனால், அந்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. தொடர்ந்து இந்த விஷயத்தில் எந்த நிலையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இதையடுத்து தனது எதிர்ப்பைக் காட்ட மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார் ராவ். ஆனாலும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இதையடுத்து வரும் மார்ச் 3ம் தேதிக்குள் தனி தெலுங்கானாவை அறிவிக்காவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தனது கட்சியின் எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என இன்று ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்க வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கமிட்டிக்கு ஆந்திர மாநில அரசு உடனடியாக தனி தெலுங்கானாவுக்கு ஒப்புதல் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ராஜினாமா உறுதி என்றும் கூறியுள்ளார்.