கோவா: 3 அமைச்சர்கள் ராஜினாமா- காங். கூட்டணி அரசு கவிழ்கிறது?!
பனாஜி: கோவாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது.
40 உறுப்பினர் கொண்ட கோவா சட்டசபையில் முதல்வர் திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும், சிறிய கட்சிகளைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் என மொத்தம் 23 பேர் உள்ளனர்.
எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜகவுக்கு 14 எம்எல்ஏக்களும், அக் கட்சியை ஆதரிக்கும் 2 சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்களும் உள்ளனர்.
ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. வெளியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து வந்தார்.
இதில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்று அமைச்சர்களாக உள்ள தேசியவாத காங்கிரசின் 3 எம்எல்ஏக்களும் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். சுயேச்சை எம்எல்ஏவும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதனால் அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறக் கூடாது என தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது எச்சரிக்கையை அந்த 3 எம்எல்ஏக்களும் மதிப்பார்களா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications