நெல்லையில் நாளை ஐடி திருவிழா
நெல்லை: நெல்லையில் எல்காட் நிறுவனம் நடத்தும் ஐ.டி மாணவர்கள்-ஐ.டி நிறுவனங்களின் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (18ம் தேதி) நடக்கிறது. 67 கல்லூரிகளை சேர்ந்த 8,370 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 500 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இங்கு தங்களது அலுவலகங்களை அமைக்க சுதர்லெண்ட், ஹெக்ஸாவேர் ஆகிய 2 நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையை போன்று தகவல் தொழில் நுட்ப பூங்கக்கள் இரண்டாம் நிலை நகரமான நெல்லையிலும் அமைவதற்கான சத்தியகூறுகள் உள்ளன, ஆங்கிலம் பேசும் ஆற்றல் படைத்த மாணவர்கள் நெல்லையிலும் உள்ளனர் என்பதை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எடுத்துரைக்க பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் உமாசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் பின்னணியில், நாளை பாளை தூய சவேரியர் கல்லூரியிலும், 19ம் தேதி சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியிலும் ஐடி விழா நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லை மாவட்டத்தில் உள்ள 25 கல்லூரிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 413 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 9 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்து 810 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 கல்லூரிகளை சேர்ந்த 648 பேரும் விருதுநகர் மாவட்டத்தில் 16 கல்லூரிகளைச் சேர்ந்த 1,499 பேரும் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 67 கல்லூரிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 370 பேர் பதிவு செய்துள்ளதாக எல்காட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்கும் வசதிகள் அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூய சவேரியர் கல்லூரியில் கலைநிழ்ச்சிகள் நடத்த திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த ஏற்பாடுகளை எல்காட் நிர்வாக இயக்குனர் உமாசங்கர், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர்.