மன்மோகன் சிங், ரஜினி, ரஹ்மானுக்கு என்டிடிவி விருது
டெல்லி: என்டிடிவி நடத்திய நேயர் வாக்கெடுப்பின் அடிப்படையில் 2007ம் ஆண்டின் சிறந்த தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பொழுதுபோக்காளர் விருது ரஜினிகாந்த்துக்கும், விளையாட்டு வீரர் விருது விஸ்வநாதன் ஆனந்த்துக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கிடைத்துள்ளது.என்டிடிவி சார்பில் 2007ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களைத் தேர்வு செய்ய நேயர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தியது. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் நேயர்கள் இதில் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்து வந்தனர்.
இதன் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி 2007ம் ஆண்டின் சிறந்த தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு என்டிடிவியின் தலைவர் பிரனாய் ராய் விருதை வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், நான் தற்செயலாக அரசியலுக்கு வந்தவன். இருந்தாலும், எனது அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நன்கு அனுபவித்து வருகிறேன்.
அரசியல் அதிகாரம் என்பது சமூகம் நமக்குக் கொடுத்துள்ள உரிமை, நம்பிக்கை. அதை வைத்துக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். 1991 முதல்தான் நான் அரசியலில் இருந்து வருகிறேன். இந்த காலகட்டத்தில் நான் பல அனுபவங்களை சந்தித்துள்ளேன்.
எனது அரசியல் வாழ்க்கையில் எந்தவித ஏமாற்றமும் இல்லை. எந்தப் பணியாக இருந்தாலும் அதை திறம்பட செய்ய, சந்திக்க எனக்கு தைரியம் கொடு என்று நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வது வழக்கம்.
லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வராது என்றே நினைக்கிறேன். 2009ல் தேர்தல் நடத்துவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.
சிறந்த தலைவர்களுக்கான பிரிவில் அப்துல் கலாம், ஷாருக் கான், அத்வானி, மாயாவதி, விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி, சானியா மிர்ஸா, எம்.எஸ்.தோணி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்த விருதினை டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற சர்வதேச சூழ்நிலை மாற்ற அமைப்பான ஐபிசிசியின் தலைவரான டாக்டர் ஆர்.கே.பச்சோரிக்கு, குளோபல் இந்தியன் ஆப் தி இயர் விருது கிடைத்தது.
கவனிக்கப்படாத நாயகர்கள் பிரிவில் வழங்கப்படும் விருது, இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியன் ஆப் தி இயர் விருதும் ராணுவ வீரர்களுக்கே கிடைத்தது.
சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினிகாந்த்:
2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளர் விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்குக் கிடைத்தது. ரஜினிகாந்த் நேரில் விருதினைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் விருதை வழங்கினார்.
அப்போது ரஜினி பேசுகையில், நான் அரசியலுக்கு வருவதும் வராததும் கடவுளின் கையில் தான் உள்ளது. எனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன் என்றார்.
சிறந்த இசைக்கான விருதினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.
2007ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது விஸ்வநாதன் ஆனந்த்துக்குக் கிடைத்தது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 2007ம் ஆண்டின் சிறந்த பிசினஸ்மேன் விருது கிடைத்தது.
என்டிடிவி சிறப்பு விருது கால்பந்து ஸ்டார் பைசுங் பூதியாவுக்குக் கிடைத்தது.
என்டிடிவி சிறப்பு பிசினஸ் விருது கே.பி.சிங்குக்கு கிடைத்தது.
டெல்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் விருது பெற்றோர் அவற்றை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், லதா ரஜினிகாந்த், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.