மணல் அள்ள எதிர்ப்பு-எம்எல்ஏ கைது
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை என்ற இடத்தில் மணல் கடத்தலை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட வேல்துரை எம்எல்ஏ, 50 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கல்லிடைகுறிச்சி அருகே பொட்டல், மலையான் குளம் பகுதி, பூமிநாதன் அணைக்கட்டு, பகுதிகளில் மணல் அள்ளுவதைத் தடை செய்ய கோரியும், மணிமுத்தாறு, 1,2 ரீச் பாசன குளங்களுக்கு தண்ணீர் தர கோரியும், சேரன்மகாதேவி-அம்பை சாலை கரம்பையில் வேல்துரை எம்எல்ஏ தலைமையில் நேற்று காலை விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவி பானுமதி, துணை தலைவர் கணபதி, வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், மணிமுத்தாறு முதல் ரீச் விவசாயிகள் சங்க செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் ராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் கோபால், நம்பி, பத்தமடை பேரூராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரவி சந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 400 பேர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை அம்பை டிஎஸ்பி ராஜ்மோகன், சேரன்மகாதேவி டிஎஸ்பி மனோகரன்குமார் ஆகியோர் கைது செய்தனர்.
முன்னதாக, வேல்துரை எம்எல்ஏ கூறும்போது மணிமுத்தாறு அணை 95 அடிக்கு மேல் பெருகி 3,4வது ரீச்சுக்கு தண்ணீர் செல்கிறது. முதல் மற்றும் 2வது ரீச்சுக்கு 50 கன அடி தண்ணீர் கேட்டிருந்தோம். அதற்கு இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை.
1, 2வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்கும்போது அணையில் கூடுதலாக தண்ணீர் இருந்தால் 3,4வது ரீச்சுக்கு நாங்களே தண்ணீர் வழங்க சொல்வோம். ஆனால் இப்போது 1,2வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்க மறுக்கிறார்கள். எனவே 1,2வது ரீச்சுக்கு தண்ணீர் வரும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
வேல்துரை எம்எல்ஏ-வை போலீசார் கைது செய்ய முயன்றபோது விவசாயிகள் அவரை கைது செய்யவிடாமல் தடுத்தனர். போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.