விஜய்காந்துக்கு தலைக்கேறிய பித்தம்-ஜெ தாக்கு
சென்னை: விஜய்காந்த்துக்கு பித்தம் தலைக்கு ஏறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி விழாவில் அவர் பேசுகையில்,
புரட்சித் தலைவர் எப்போதும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அதனால் தான் அவர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அன்று இந்த திட்டத்தை எதிர்கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் கேலி செய்தனர்.
குழந்தைகளை தட்டு ஏந்த வைத்து விட்டார் என்று ஏளனம் செய்தனர். ஆனால் இன்று அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.
புரட்சித் தலைவர் எழுதி வைத்த உயிலில் ராமாவரம் தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் காது கேளாத குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அந்த பள்ளியை லதா ராஜேந்திரன் சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
காது கேளாத குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க மிகுந்த பொறுமை தேவை.இது பூமா தேவிக்கு இருக்கும் பொறுமையாகும்.
இன்று சிலர் புரட்சித் தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு திடீர், திடீரென கட்சிகள் தொடங்குகிறார்கள். நான் தான் தலைவர் என்கிறார்கள்.
இன்ஸ்டன்ட்' காபி தயாரித்து விடலாம். ஆனால் இன்ஸ்டன்ட்' தலைவர்களை தயாரிக்க முடியாது. புரட்சித் தலைவரை பார்த்து அவரைப்போல கட்சி தொடங்க வேண்டும் என்று முயற்சி செய்து கட்சி தொடங்குகிறார்கள். இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை மாதிரி உள்ளது.
புரட்சித் தலைவர் அரசியல் கட்சி தொடங்கிய உடனே தலைவர் ஆகி விடவில்லை. முதல்வர் ஆகி விடவில்லை. இளம் வயதில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு, கட்சியை வளர்த்தார். அண்ணாவை தலைவராகக் கொண்டு, கலைத்துறையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொட்டி, கொட்டி கட்சியை வளர்த்தார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு வேறு ஒருவர் (கருணாநிதி) அந்த இயக்கத்துக்கு (திமுக) தலைவராகி விட்டார்.
சில பத்திரிகைகளில் அரசியல் கூட்டணி பற்றி யூகங்கள் வகுக்கின்றன. சிலர் (விஜய்காந்த்- சரத்குமார்) தங்களைப் பற்றி தாங்களே விளம்பரம் செய்து கொண்டு புரட்சித் தலைவரின் வாரிசு என்பது போன்ற மாயையை உருவாக்குகிறார்கள்.
சிலருக்கு சில நேரம் பித்தம் ஏறுவது இயற்கை. பித்தம் தலைக்கு ஏறினால் அவர்களை ஆட விட வேண்டும். அவர்கள் ஆடட்டும். எது வேண்டுமானாலும் பேசட்டும். இந்த பித்தம் தானாகத்தான் இறங்க வேண்டும்.
தேர்தல் வரும்போது தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். பித்தம் இறங்கும் நேரம் விரைவில் வரும். அப்போது பித்தம் தெளியும். தேர்தல் அதன் பிறகு இது கூட்டணி குறித்த யூகங்களும், மாயைகளும், கேள்விகளும் எழாது.
புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின் அவரது கட்சியை நான் தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். எனவே எம்ஜிஆரின் வாரிசு என்று வேறு யாராவது சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு நான்தான். இதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications