கைதிகளுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளுடன் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்றுடன் இது முடிவுக்கு வந்தது.
இதன் ஒரு பகுதியாக, சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ் மையம் அமைப்பு, சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுடன் பொங்கல் கொண்டாட முடிவு செய்தது.
அதன்படி நேற்று காலை புழல் சிறையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழி கலந்து கொண்டார்.
சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கனிமொழி இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்துக் கூறுகையில், காணும் பொங்கலையொட்டி சென்னை புழல் சிறையில் உள்ள 3000 கைதிகளுடன் பொங்கல் கொண்டாடினோம்.
பொங்கல் பரிசாக 20 கலர் டிவி பெட்டிகள், ஒரு இசிஜி பரிசோதனைக் கருவி, புதிய உடைகள், இசைக் கருவிகள், 1000க்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினோம் என்றார்.
மேலும் சிறையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு பொம்மைகள், சாக்லேட்டுகள் ஆகியவற்றையும் கனிமொழி வழங்கினார். மேலும், ஆண்கள் சிறையிலும், பெண்கள் சிறையிலும் தனித் தனியாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதாக தமிழ் மைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.