பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்
சென்னை: மேற்கு வங்கத்தை ஆட்டிப் படைத்து வரும் பறவைக் காய்ச்சல் நோய் தமிழகத்தில் இல்லை. எனவே மக்கள் எந்தவித பயமும் இல்லாமல் வழக்கம் போல கோழிக் கறி சாப்பிடலாம், முட்டை சாப்பிடலாம் என தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளஆர்.
அமைச்சர் கீதா ஜீவன், பறவைக் காய்ச்சல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அவர் கூறுகையில், பறவைக் காய்ச்சல் குறித்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. மேற்கு வங்கத்தின் இரு மாவட்டங்களில் மட்டும் பறவைக் காய்ச்சல் இருப்பதை மத்திய அரசு உறுதிப் படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோழிப் பண்ணைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், பெங்களூரில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டன. இதில், பறவைக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். மேலும் மேற்கு வங்கத்தில் இருந்து கோழிகளை ஏற்ற வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படும்.
பறவை காய்ச்சல் பீதியால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை வைத்துள்ளவர்கள் பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இது தவிர மாநிலத்தில் உள்ள 14 பறவைகள் சரணாலயங்களிலும் தீவிரமாக கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 200 அதிரடிப் படையினர் அமைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கோழிப் பண்ணைகளுக்குச் சென்று பறவைக் காய்ச்சல் உள்ளதா என பார்வையிட்டு வருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications