நானாவைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்-கருணாநிதி
சிறந்த தொழில் முனைவோருக்கான சாதனை விருதுகளை (TIECON-2008) வழங்கி கருணாநிதி பேசியதாவது,
இந்த உலகம் தொழில்நுட்பத்தால் இயங்கிக் கொண்டிருக்கிறது. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கப் போகிறது. இந்த நூற்றாண்டில் உலகில் மிக முக்கியமான நாடாக இந்தியா மாறப் போகிறது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் சித்த மருத்துவம் உருவானது. சித்தர்கள் மூலிகை மருந்துகளை கண்டுபிடித்தனர். அந்த மருந்துகள் 21ம் நூற்றாண்டு நடந்து வரும் இன்றைய காலகட்டத்திலும் பயன்படுகின்றன.
புதிய சிந்தனைகள் உருவாகும் போது, அதனால் உருவாகும் பொருட்களின் விலை குறையும், மக்கள் பயன் பெறுவார்கள், அந்த நிறுவனமும் வளரும்.
அது தான் நானோ கார் விஷயத்தில் நடந்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலையில் நானோ காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரே ஒரு புதிய சிந்தனையின் விளைவு தான்.
இதைப் பார்த்து மற்ற நிறுவனங்களும் புதிய சிந்தனை பெறும். புதிய பொருட்களை மலிவு விலையில் தயாரிப்பாளர்கள்.
தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்குவதற்கான நல்ல சூழ்நிலை நிலவுகிறது. சலுகைகள் கிடைக்கின்றன. வெளிப்படையான தொழிற்கொள்கை உள்ளது. எனவே பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்து வருகிறது. சென்னை, ஓசூர், மதுரை, தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் பாதையில் சிறந்த தொழில் பூங்காக்கள் அமையும்.
இதன் மூலம் தமிழகம் தகவல் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகும். தமிழக மக்கள் வாழ்க்கை தரமும் உயரும்.
இலவச டிவிக்கள் தருகிறோம். எதற்காக, பொழுது போக்கிற்காக மட்டுமா. இல்லை. உலக அளவிலான விஷயங்களை ஏழைகளும் இல்லாதவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.
இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே வெளி உலகத்தை அறியமுடிகிறது. இளைஞர்கள் தங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள பயன்படுகிறது என்றார்.