தாம்பரத்தில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி
சென்னை: சென்னை தாம்பரம் அருகே பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாம்பரம் சானிட்டோரியம் அருகே இந்த விபத்து நடந்தது. சென்னையிலிருந்து சேலம் சென்று கொண்டிருந்த அந்த அரசு விரைவுப் பேருந்து முதலில் ஒரு வேன் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் பஸ்ஸை பிளாட்பாரத்தில் ஏற்றினார். அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பஞ்சவர்ணம் (47), மாரப்பன் (45) ஆகியோர் மீது பஸ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் வேனில் அமர்ந்திருந்த பஞ்சவர்ணத்தின் மகள் விஜயலட்சுமி (14), மற்றும் இந்தியன் ரிப்போர்டர்ஸ் வார இதழின் ஆசிரியர் வி.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.