தமிழகம் மதுவில் மிதக்கிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு
புதுச்சேரி: தமிழகமே மது போதையில் மிதந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குப் போய் குடித்து கெட்டு வருகிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரிக்கு கல்யாணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. தமிழகமே குடிபோதையில் மிதக்கிறது.
தமிழகத்தில் குடித்தது போதாது என்று புதுச்சேரிக்கும் வந்து குடிக்கிறார்கள். புதுச்சேரி மதுக் கடைகளில் நிற்கும் கூட்டத்தினரில் பாதிப் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி எவ்வளவோ பரவாயில்லை. புதுச்சேரி மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார்கள். குடிக்காத புதுச்சேரி மக்களை நான் பாராட்டுகிறேன் என்றார் ராமதாஸ்.
சிமென்ட் விற்பனை - அரசுக்கு ராமதாஸ் கேள்வி்
இதற்கிடையே, ரேஷன் கடைகள் மூலம் சிமென்ட் விற்பனை செய்யும் அரசின் நடவடிக்கையில் பல குழப்பங்கள் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1,000 சதுர அடிக்குள் வீடு கட்டுபவர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சலுகை விலையில் அதிகபட்சம் 100 மூட்டை சிமென்ட் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் சமீபத்தில் முதல்வரை சந்தித்த போது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்கள் வீடு கட்டுவதற்கான சிமென்ட் தேவை குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளனர்.
ஒரு சதுர அடிக்கு 20 கிலோ சிமென்ட் என்று கணக்கிட்டு 1,000 சதுர அடி வீடு கட்ட 400 மூட்டை தேவை என்று அதில் கூறியுள்ளனர். அந்த வகையில் நலிவடைந்த பிரிவினர் வீடு கட்டுவதற்கு அதிகபட்ச சிமென்ட் தேவை 400 மூட்டை என உச்சவரம்பு காட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில் 1,000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டுவோருக்கு மட்டும் 100 மூட்டை சிமென்ட் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
எந்த அடிப்படையில் இந்த திடீர் முடிவுக்கு அரசு வந்துள்ளது. வீடு கட்ட அதிகபட்சத் தேவை 400 மூட்டை என்று கணக்கிட்டு, மாதம் 20 லட்சம் மூட்டைகள் வழங்குவதாக தனியார் ஆலை அதிபர்கள் அறிவித்ததற்கு, அரசின் முடிவால் முட்டுக்கட்டை ஏற்படாதா. இதுபற்றி அரசு விளக்க வேண்டும்.
அதே நேரத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் இல்லாதவர்களும் மனு செய்யலாம் என்றும், அந்த விண்ணப்பங்களை வருவாய் அலுவலர் ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரையின் பேரில் மலிவு விலை சிமென்ட் பெற ஆணை வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.
இது அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் இல்லாமலேயே வீடு கட்டுபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்து விடாதா. இது முறைகேடுகளுக்கு வழி வகுத்து விடாதா. அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த முடிவையும் திணித்து விட்டார்களா.
எனவே, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் உள்ளவர்களுக்கு மட்டும் மலிவுவிலை சிமென்ட் என்றும், உச்சவரம்பை 400 மூட்டையாக உயர்த்த வேண்டும் என்றும் அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நலன் கருதியே இந்த கருத்துக்களை அரசின் பரீசிலனைக்கு வைக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.