அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்த மத்திய அமைச்சர்
டெல்லி: முறையான அனுமதி பெறாமல் வாகா எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தானுக்குள் 2 அடி எடுத்து வைத்த மத்திய வணிகத்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷூக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அமைச்சர் ஜெய்ராம் கூட்டம் முடிந்த பின் அங்குள்ள இந்தியா-பாகிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதியான வாகாவுக்கு சென்றார்.
அவருடன் உயர் அதிகாரிகளும் சென்றனர். வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற அவர் சில அடி தூரம் நடந்துவிட்டு பின்னர் திரும்பி விட்டார். அவரை காவலுக்கு நின்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தடுக்கவில்லை.
ஆனால் முறையான அனுமதி பெறாமல் மத்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் எப்படி நுழைந்தார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது,
நான் வாகா எல்லையைத் தாண்டி 2 அடி தான் சென்றேன். உடனே திரும்பி விட்டேன். நான் பாகிஸ்தான் நாட்டுக்குள் செல்லவில்லை என்றார்.
இதுகுறித்து இந்திய குடியுரிமை உயர் அதிகாரிகள் கூறியதாவது,
அமைச்சர் ஆர்வத்தின் காரணமாக வாகா எல்லையை கடந்தார். அவரை காவலுக்கு நின்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கூட தடுக்கவில்லை. இதில் எந்த தவறும் கிடையாது என்றனர்.
அமைச்சர் என்றால் தவறில்லை போலிருக்கிறது.